செவ்வாய், 11 ஜனவரி, 2011

மார்ச் முதல் பேஸ்புக் சேவை நிறுத்தப்படுமா? பேஸ்புக் பாவனையாளரா நீங்கள்?




மார்ச் முதல் பேஸ்புக் சேவை நிறுத்தப்படுமா? பேஸ்புக் பாவனையாளரா நீங்கள்? தினசரி அதில் உலாவருபவரா?அவ்வாறாயின் இச்செய்தியை கேள்வியுற்றிருந்தால் ஆடித்தான் போய் இருப்பீர்கள்.

ஆம் கடந்த சில தினங்களாக பேஸ்புக்கானது தனது சேவையை நிறுத்திக்கொள்ளப்போகின்றது என்ற செய்தி வேகமாக பரவிவந்தது.

இணையத்தளமொன்று கடந்த சனிக்கிழமை வெளியிட்ட இச்செய்தியில் பேஸ்புக்கானது எதிர்வரும் மார்ச் மாதம் தனது சேவையை நிறுதிக்கொள்ளவுள்ளதாகவும், அதிகப்படியான உளைச்சலே இதற்கான காரணமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்செய்தியானது பிரபல டுவிட்டர் மற்றும் பேஸ்புக் இணையத்தளங்களில் வேகமாக பரவியது. பலரை பெரும் சோகத்துக்குள்ளாக்கியது என்று கூட சொல்லலாம்.

எனினும் இது வெறும் வதந்தி எனவும் பேஸ்புக் தொடர்ந்து செயற்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் இணையதள நண்பர்கள் சமூக அக்கறை உள்ளவர்களா?

லண்டன் : "பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களில் உலவுவோர் உண்மையில் சமூக அக்கறை இல்லாதவர்கள்; இதுபோன்ற "ஆன்லைன்' நண்பர்களை நம்பாமல் இருப்பதே நல்லது' என, மனநல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில், பிரிட்டனை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் தனது 1,048 "பேஸ்புக்' நண்பர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், எவருமே அவருக்கு நன்றி அல்லது வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை.

இதனால், மனமுடைந்த அவர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுள்ளார். அதுபற்றியும் தனது "பேஸ்புக்' பக்கத்தில் எழுதியுள்ளார். அவரது நண்பர்கள் பலர் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும், ஒருசிலர் மட்டும் கடமைக்காக அவரது முகவரியைக் கேட்டுள்ளனர். இருந்தாலும் யாரும் குறிப்பிட்ட நபரை நேரில் சென்று பார்க்கவில்லை. மறுநாள் அப்பெண்ணை பார்க்க வந்த அவரது தாய், தனது மகளின் தற்கொலையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த தற்கொலை சம்பவம் "பேஸ்புக்' இணைய நண்பர்கள் பற்றி வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மனநல நிபுணர்கள் சிலர் இதுகுறித்து கூறியதாவது: உண்மையான ரத்தமும், சதையுமான நண்பர்களை யாரும் நம்புவதில்லை. மாறாக, இதுபோன்ற சமூக வலைதளங்களில் உள்ள நண்பர்களையே மிகவும் நம்புகின்றனர். சமூக வலை தளங்களில் முகம் தெரியாத, சமூக அக்கறை இல்லாத பலர் நண்பர்களாக வலம் வருகின்றனர். இன்னும் சிலர் குளிப்பது முதல் தூங்குவது வரை பல விஷயங்களை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்; நண்பர்களும் தங்களைப் போல் உண்மையாக இருப்பதாக நினைத்து ஏமாறுகின்றனர்.

தற்போதைய உலகில் உண்மையான நட்பு என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. இந்த நிலையில், "பேஸ்புக்' போன்ற சமூக வலை தளங்களில் முன்பின் பார்க்காத, முகம் தெரியாத நண்பர்கள் அவசியம் தானா என்பதை நாம் யோசிக்க வேண்டும். சமூக வலை தளங்களில் உலவும் பலருக்கு "நண்பர்கள்' என்பதன் உண்மை அர்த்தம் தெரிவதில்லை. நேரம் கடத்தவும், பொழுதுபோக்கவும் பயன்படும் சமூக வலை தளங்களில் உண்மையை எதிர்பார்ப்பது அவசியமற்ற ஒன்று.

"தனக்கு எது நடந்தாலும் "பேஸ்புக்' நண்பர்கள் காப்பாற்றுவர்' என நினைப்பது அடிமுட்டாள்தனம். உங்களுக்கு சம்பந்தமில்லாத ஒருவர் எதையாவது கூறும்போது, நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருந்து விடலாம். இவ்வாறு மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

"பேஸ்புக்' செய்தித் தொடர்பாளர் மரியா ஹீத் இதுகுறித்து கூறுகையில்,"தற்கொலைகளை தடுக்க எங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எனினும், பிரச்னை உள்ளவர்கள் "பேஸ்புக்' இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள உதவி மையத்தை தொடர்புகொண்டால், உரிய தீர்வு காண நாங்கள் முயற்சிப்போம். இதற்காக, முழுநேர பணியாளர்களையும் நியமித்துள்ளோம். கடந்த ஆண்டில், இதுபோன்று 129 பேரின் பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளோம்,'' என்றார்.


திங்கள், 10 ஜனவரி, 2011

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்


காதல் இளமையில் அரும்பும் இனிய உணர்வு மட்டுமல்ல; அது உண்மையாக உள்ள போது முதுமையின் முடிவு வரை தங்கக்கூடிய ஓர் அழகான நிரந்தர பந்தம். கைகளைக் கோர்த்து நடப்பது காதல் அல்ல, மனங்களைக் கோர்த்து இணைவது காதல், ஆசைப்பார்வைகள் காதல் அல்ல, மோகம் வடிந்தும் பின்னிப்பிணைவது காதல், ஆனால், இந்த வரையறைக்கேற்ற காதலை இன்று அதிகம் காண முடிவதில்லை.

இனிய உணர்வாக ஆரம்பிக்கும் காதல் விரைவிலேயே கசப்பான அனுபவமாகி விடுகிறது. காரணம் திரைப்படங்கள், காதல் கதைகள் எல்லாம் திருமணமே காதலின் வெற்றி என்ற பார்முலாவை இளைஞர் மனதில் பதித்து விட்டது தான் என்றும் சொல்லலாம். பார்த்துக் காதல், பார்க்காமல் காதல், மோதல் காதல், மோகக்காதல், இரக்கக்காதல் என்று ஏகப்பட்ட காதல்கள் வெள்ளித்திரையில் காட்டப்பட்டாலும் திருமணத்தோடு அங்கு காட்சி முடிந்து விடுகிறது.

அதன் பிறகு எல்லையில்லாத ஓர் இன்பப் பயணம் தான் என்ற கற்பனை காண்பவர் மனதில் விரிகிறது. ஆனால், உண்மையில் திருமணம் காதலின் வெற்றியல்ல. அது காதலின் வெறும் நுழைவுத் தேர்வே. உண்மையான வெற்றி அந்த ஆரம்ப இனிமையைக் கடைசி வரையில் தக்க வைத்துக் கொள்வது தான். திருமணத்தில் முடியாத காதல் சோகமானாலும் அது பல இனிய நினைவுகளை சாசுவதமாக மனதில் தக்க வைத்துக் கொள்கிறது.

ஆனால் திருமணத்தில் முடிந்த காதல் பல சமயங்களில் கலைந்த கற்பனைக் கனவுகளாகவும், கானலைத் தேடி ஓடிய ஓட்டமாகியும் விடுகிறது. இதெல்லாம் எதனால்? எங்கே தவறு நிகழ்கிறது என்று சிந்தித்தால் 'புரிந்து கொள்ளுதல்' என்கிற அம்சம் இது போன்ற காதலில் இல்லாமல் போகிறதால் தான். கண்மூடித்தனமான காதல் என்றும் கசப்பான அனுபவமாகவே முடியும். எனவே காதலிப்பவர்களே கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு காதலியுங்கள்.

முதலில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நிறைய கேளுங்கள். நிறைய கவனியுங்கள். அவசர முடிவுகளைக் கண்டிப்பாக எடுக்காதீர்கள். காதலிக்கும் நேரத்தில் காதலிப்பவரிடம் ஒரு குறையும் தெரியாது விட்டால் நாம் கண்களை மூடிக் கொண்டு காதலிக்கிறோம் என்று அர்த்தம்.

காதலிப்பது மனிதப்பிறவியை என்றால் குறைகள் கண்டிப்பாக இருக்க வேண்டுமல்லவா? அந்தக் குறைகளில் முக்கியமான சிலவற்றையாவது அறிந்திருங்கள். அவர்களுடைய முக்கிய பலவீனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவை உங்களால் சகித்துக் கொள்ள முடிந்தவையா, பொறுத்துக் கொள்ள முடிந்தவையா என்று யோசித்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் தேனிலவு முடிந்த பின்னர் நீங்கள் தினமும் சந்திக்கக்கூடியவை அவை. உண்மையான காதல் இருக்கும் போது மாறுவதும் சுலபம், மாற்றுவதும் சுலபம். ஆனால் காதலின் பலத்தை விடக் குறைகளின் தாக்கம் பெரிதாக இருக்கையில் மாறுதல் சுலபமல்ல. பெரிய பாதிப்பில்லாத குறைகளையும் பலவீனங்களையும் பொறுத்துக் கொள்ளலாம்.

அலட்சியப்படுத்தலாம். ஆனால், அவை சகித்துக் கொள்ள முடியாதவையாக இருக்கும் போது, அதை உணர்த்தி மற்றவரை மாற்றவும் முடியாத போது காதல் முன்பு கொடுத்த மகிழ்ச்சிக்கு மும்மடங்கு துக்கத்தைத் தருவதாக அமைந்து விடும் என்பதற்கு எத்தனையோ பேர் வாழ்க்கையே சாட்சி.

வாழ்க்கை மூன்று மணி நேர சினிமா அல்ல. வாழ்க்கையின் எல்லை வரை நீளும் உண்மைக் காதலை சினிமா மூலமோ, கற்பனை மூலமோ தெரிந்து கொள்ள முடியாது.

சர்க்கரையைப் படத்தில் பார்த்தோ, எழுதியதைப் படித்தோ அதை சுவையை உணர முடியாது. சாப்பிட்டால் மட்டுமே அதன் இனிப்பை உணர முடியும். காதலும் அப்படித்தான். பார்த்த சினிமாவை வைத்தோ, படித்த கதையை வைத்தோ கண்மூடித்தனமாய் ஏற்படும் கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள்.

அந்த உண்மைக் காதலின் உன்னதத்தை உணர வேண்டுமென்றால் கண்களைத் திறந்து வைத்துக் காதலியுங்கள். அது முடிந்தால் உண்மையான காதல் உங்களுக்குக் கைகூடக்கூடும். அதன் மூலம் கிடைக்கும் பேரானந்தத்தை கடைசி மூச்சு வரை நீங்கள் அனுபவிக்கக்கூடும்.
Related Posts Plugin for WordPress, Blogger...